அரசியல் தீர்வு, சிறுபான்மை மக்களின்
பிரச்சினைகள் குறித்தும் பேசப்படுகின்றது
இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தற்போது கொழும்பில் முக்கிய பேச்சுகள் நடைபெறுகின்றன.
இலங்கை வருகைதந்த மோடி, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூட்டமைப்பினரைச் சந்தித்து தற்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்தியப் பிரதமர் இலங்கை வருகைதந்தார்.. அவருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதந்தச் சந்திப்பில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம், அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், ஐ.நா. தீர்மானம் மற்றும் இலங்கை – இந்திய விவகாரங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுகள் இடம்பெறுகின்றன என எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Comments
Post a Comment