அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிசில் பெண்ணின் கணவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மர்மமான முறையில் காணாமல்போன பெண் திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை வீதியைச் சேர்ந்த வெற்றிவேல் கனகம்மா (மலர்) 53 வயதுடைய மூன்று பிள்ளைகளில் தாய் எனவும் தெரியவந்துள்ளது.
திருக்கோவில் விநாயகபுரம் 02 பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனது மகளின் 2வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் 11.30 மணியளவில் அயல் வீட்டுக்குச் சென்று இருந்த வேளை அவரது வீட்டில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா வயல் வேலை முடித்து வீடு திரும்பிய போது வீட்டில் மகளின் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என சென்று மனைவியைத் தேடியுள்ளார்.
ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடமத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பொலிசாரும், குடும்பத்தினரும் காணாமல்போன பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Post a Comment