1990 சுவசரிய என்ற இலவச அம்பியுலன்ஸ் சேவை விரைவில் கிழக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்படுமென்று இதன் தலைமை நிறைவேற்று அதிகாரி ரொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவை நாடு முழுவதிலும், அனைத்து மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கும் நிகழ்வு நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2016ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்பியுலன்ஸ் சேவையின் மூலம் இதுவரையில் பொதுமக்களுக்குப் பெரும் நன்மை கிடைத்துள்ளது.
இந்தச் சேவையின் மூலம் இதுவரையில் நன்மையடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகமாகும். சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை மேல் மாகாணத்தில் விரிவான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதுவரையில் சுவசரிய பணியாளர் சபையில் 1440 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதுடன் சாரதிகளும் முறையானப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் போது, சுவசரிய அம்பியுலன்ஸ் சேவையின் மூலம் விரிவான கூடுதல் சேவையை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு 1990 சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொலைபேசி அழைப்பு கிடைத்தவுடன் நோயாளரிடம் செல்வதற்கு அதன் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. நாளாந்தம் 790 நோயாளர்களுக்கு மேற்பட்டோர் இதன் மூலமான சேவைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இலவசமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் சேவையின் மூலமான பயன்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். வைத்தியசாலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் நோயாளருக்கு தேவையான துரித சிகிச்சையை வழங்குவதற்கான பணியாளர்களும் இந்த அம்பியுலன்ஸ் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment